Thursday, December 27, 2007

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது -- குறித்து....!!!

மு. இராமனாதன் கூறியது போல (http://www.thinnai.com/?module=displaystory&story_id=60712203&format=html )முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான பதிலும் முன்னிறுத்தப்படுகிறது.

"நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப் பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்யலாமே?"
இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பும் ஜெனிவீவ் கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்துப் பேசுகிறாள்: "ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள் எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாரும் தினம் தினம் தங்களை வருத்திப் பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடம்பின் எல்லையைக் கண்டுபிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு."


இங்கு தமிழ் சினிமா Hero போன்று அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தும் போக்கை காண்பதை தவிர்க்க முடியவில்லை. பதிலில் சாமார்த்யம் இருக்குமளவிற்கு சரக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பணம், புகழ் நிமித்தம் அநேகமாக வர்த்தகமாக்கப்பட்டுவிட்ட இன்றய விளயாட்டு வீரர்களின் நோக்கத்தை "உடம்பை அறிவது" என்பதன் கீழ் வகைபடுத்தியது நெருடலையே ஏற்படுத்துகிறது.

விளயாட்டு என்பது என்ன? ஏன் தோன்றியது? அதன் நோக்கம் என்ன? இன்றயதினம் உலக அரங்கில் விளையாட்டு என்ற பெயரில் நடந்துகொண்டிருப்பதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம் ?

உடம்பை, மனதை ஆரோக்யமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, வெற்றி-தோல்விகளை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவது மற்றும் ஒரு குழுவாக செயல்பட்டு (team work) எப்படி வெற்றி ஈட்டுவது என்பதை புரிந்துகொள்தல் போன்றவை விளையாட்டின் பயன்கள். இதில் எதுவும் இன்றய விளையாட்டில் இருப்பதாய் தெரியவில்லை. குத்துச்சண்டை எப்படி ஒரு விளையாட்டாக இருக்க முடியும்?

இன்றய உலகில் அநேகமாக அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களும் உடல் நலத்தை விற்று பணமும் பதக்கங்களும் ஈட்டுபவர்களாகவே உள்ளனர். இவர்களின் "எல்லை நீட்டுகிற" முயற்சியில் எத்தனைமுறை "knee surgery" செய்து கொள்கிறார்கள் ? இது மேலும் நீண்டு ஊக்க மருந்து உட்கொள்தல், மற்றும் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு அரசியல் (Indian cricket)...... இதில் "உடம்பை அறிதல்" எங்கு நிகழ்கிறது? இதையும் தாண்டி "இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு" என்பது நிஜமாகவே தொண்டையில் சிக்கிக்கொள்கிறது.

விளையாட்டு என்பது தன்னளவில் உன்னதமானது. தற்கால தொழிலதிபர்கள் அதை விளம்பரமாக்கி வியாபாரமாக்கிவிட்டனர். விளையாட்டு வீரர்களோ கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ரசிகர்களோ நேரத்தையும் பணத்தையும் பாழ்படுத்துகின்றனர். இந்த பரிதாபமே விளையட்டு என்ற பெயரில் இங்கு அரங்கேருகின்றது.

சரி...இவையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஒரு மிக நேர்மையான விளையாட்டு வீரரையே எடுத்துக்கொள்வோம். அவருடைய அதிகபட்ச உன்னதமான நோக்கம் என்னதான் இருந்துவிட முடியும்? அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டும், அது பணமாகவோ, புகழாகவோ அவரை வந்து சேரவேண்டும் என்பதைத்தவிர? இதில் "உடம்பை அறிதல்" என்று ஒரு யோகியைப் போலவோ, சேவை என்ற அளவிற்கு புனிதப்படுத்துதலோ தேவையற்றது என்பது என் கருத்து. நல்லவேளை, இதில் தேசப்பற்று என்ற புண்ணாக்கையும் சேர்த்து சிக்கலை பெரிதாக்காமல் விட்ட அம்மையாருக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் நன்றி.